44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடருக்கான ஜோதி ஓட்டம் - டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
Jun 20 2022 10:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடருக்கான ஜோதி ஓட்டத்தை, டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. வரும் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் நடைபெறவுவுள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில், 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் மகளிர் பிரிவிலும் கலந்துகொள்கின்றன. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்துக்கான நிகழ்ச்சி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்றது.
பின்னர் பிரதமர் திரு.மோடி, செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம், பிரதமர் மோடி ஜோதியை ஒப்படைத்தார்.
இந்த ஜோதி ஓட்டம் 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வந்து இறுதியாக போட்டி நடக்கும் மாமல்லபுரம் வந்தடையும். இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு.மோடி, புதிய இந்தியாவின் இளைஞர்கள் ஒவ்வொரு விளையாட்டிலும் சிறந்து விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார். செஸ் விளையாடும் குழந்தைகள் நல்ல பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டவர்களாக மாறி வருவதாகவும், கடந்த 8 ஆண்டுகளில், செஸ் விளையாட்டில் இந்தியா தனது செயல்திறனை மேம்படுத்தியுள்ளது எனவும் பிரதமர் கூறினார்.