கொரோனா பாதிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் ஷர்மா விலகல் - கபில் தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நியமனம்
Jun 30 2022 8:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் ஷர்மா விலகியதை அடுத்து, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி ஜூலை ஒன்றாம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 5வது மற்றும் கடைசி போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர், பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டபோது கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட ரோகித் ஷர்மாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் விலக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்மூலம் கபில் தேவுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார்.