பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி : பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா
Aug 1 2022 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிர் கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
மொத்தம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டியில் இரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முனிபா அலி 32 ரன்கள் எடுத்தார். அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாத பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷபாலி வர்மா 16 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ஸ்மிர்தி மந்தனா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 11 புள்ளி நான்கு ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதை கொண்டாடும் வகையில், போட்டி நடைபெற்று வரும் Edgbaston Stadium அருகே திரண்ட ஐரோப்பிய வாழ் இந்தியர்கள் மேள தாளங்கள் முழங்க நடனமாடி கொண்டாடினர்.