சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி : தமிழக வீரர் பிரக்ஞானந்தா, வீராங்கனை வைஷாலி, இந்திய வீரர்கள் குகேஷ், அபிஜித், ஹரிகிருஷ்ணா, ரவுனக் சத்வானி ஆகியோர் 3வது சுற்றிலும் வெற்றி
Aug 1 2022 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செஸ் ஒலிம்பியாட் தொடரில் 3-வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, வீராங்கனை வைஷாலி, இந்திய வீரர்கள் குகேஷ், அபிஜித், ஹரிகிருஷ்ணா, ரவுனக் சத்வானி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3வது சுற்றில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பி அணி ஓபன் பிரிவில் வெற்றி பெற்றுள்ளது.3-வது சுற்றில் தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ், தனது 37வது நகர்த்தலில் சுவிட்சர்லாந்தின் ஜார்ஜியாடிஸ் நிகோவை வென்றார். இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா தனது 30-வது நகர்த்தலில் டிமிட்ரியோசை வீழ்த்தினார்.
ஐஸ்லாந்தை சேர்ந்த குட்முண்டுரை எதிர்கொண்டு 36-வது நகர்த்தலில் வென்றார் அபிஜித் குப்தா. சுவிட்சர்லாந்தின் போக்னர் செபாஸ்டியனை வென்றார் சரின் நிஹில். பொதுப்பிரிவு ஏ அணியில் விளையாடிய ஹரிகிருஷ்ணா, கிரீஸ் நாட்டை சேர்ந்த ரவுனக் சத்வானி, அபிஜித் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். 3-வது சுற்றில் உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்திரிய வீராங்கனை பங்கேற்கவில்லை. இதையடுத்து நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக வீரர் பிரக்ஞானந்தா, 3வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெல்லடியர் யானிக்கை 67-வது நகர்த்தலில் வென்றதையடுத்து 4-0 என்ற புள்ளிக் கணக்கில் சுவிட்சர்லாந்தை இந்தியா வென்றது. இங்கிலாந்து வீராங்கனை டோமாவை, தமிழக வீராங்கனை வைசாலி தனது 65வது நகர்த்தலில் வென்றார். முன்னதாக, செஸ் போட்டிகளை காண வந்த முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வீரர்கள், வீராங்கனைகளை சந்தித்து உணவு, இருப்பிட வசதிகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.