இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டி- 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
Aug 2 2022 6:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ரோகித் சர்மா முதல் பந்திலேயே கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 11 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 10 ரன்களும் எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 31 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 19 புள்ளி நான்கு ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஒபேட் மெக்காய் 6 விக்கெட்களை எடுத்தார்.
இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் பிராண்டன் கிங் மற்றும் மேயர்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். கெய்ல் மேயர்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நிகோலஸ் பூரன் 14 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய பிராண்டன் கிங்ஸ் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19 புள்ளி இரண்டு ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.