ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27 ஆம் தேதி தொடங்குகிறது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது பி.சி.சி.ஐ
Aug 9 2022 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019-ம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு இலங்கையில் நடைபெற இருந்தது. அங்குள்ள பொருளாதார, அரசியல் சூழல் காரணமாக இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கும் என்றும், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, ரோகித் சர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல் துணை கேப்டனாக இருப்பார். இதில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. காயம் காரணமாக பும்ரா தொடரில் இடம்பெறவில்லை.