44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவையொட்டி இன்று மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் - சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
Aug 9 2022 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நாளை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் 9-ம் தேதியே நிறைவு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிறைவு விழா இன்று மாலை ஐந்தரை முதல் இரவு எட்டரை மணி வரை நடைபெற உள்ளது என விளையாட்டு ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திரு. எம்.எஸ்.தோனி, 5 முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை ஐந்தரை மணி அளவில் நடைபெறும் விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவையொட்டி நேரு உள் விளையாட்டரங்கை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.