32 நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நாளை தொடக்கம் : கோலாகல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு
Nov 19 2022 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகின் மிகப்பெரிய கால்பந்து விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி அங்கு போட்டி நடைபெறும் நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி, முதல்முறையாக தற்போது வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் நடைபெறுகிறது. நாளை தொடங்கி அடுத்த மாதம் 18ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 32 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த சில தினங்களாவே ஒவ்வொரு அணிகளாக கத்தார் வரத்தொடங்கின. இதனால் கத்தார் முழுவதும் கால்பந்து கோலாகலம் களைகட்டியுள்ளது. குறிப்பாக போட்டி நடைபெறும் தலைநகர் தோஹா, அல்கோர், லுசைல், அல்ரையான் உள்ளிட்ட நகரங்களில் காணும் இடமெல்லாம் கால்பந்து விளம்பரங்களும், ரசிகர்கள் கூட்டமுமே கண்ணில் தென்படுகின்றன.
கத்தார் முழுவதும் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிக்காகவே பிரத்யேகமாக 7 புதிய மைதானங்கள் அங்கு உருவாக்கப்பட்டுள்ளன. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, பிரசில், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட உலகின் பலம் வாய்ந்த 32 அணிகள் இதில் களமிறங்குகின்றன.
இவை அனைத்தும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தகுதி பெறும் முதல் இரண்டு அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த போட்டி தோஹாவில் நாளை தொடங்குகிறது. மாலையில் நடைபெறும் கண்கவர் தொடக்கவிழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார் அணி, ஈக்வெடாருடன் மோதுகிறது.