ராகுல் டிராவிட்டுக்காகவே உலகக்கோப்பையை வெல்ல விரும்புகிறோம் - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா
Nov 19 2023 2:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்காகவே உலகக்கோப்பையை வெல்ல விரும்புவதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் அடைந்த தோல்விக்கு, இம்முறை இந்திய அணி பதிலடி கொடுத்து 3வது முறையாக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில், போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், அகமதாபாத் மைதானத்தில் குவியவுள்ள ஒன்றரை லட்சம் ரசிகர்களை அமைதியாக அமர வைப்பதை தவிர வேறு எதுவும் தங்கள் அணிக்கு மனநிறைவை தராது என்று கூறியுள்ளார். ரசிகர்களை சத்தமில்லாமல் அமர வைப்பதே ஆஸ்திரேலியா அணியின் இலக்கு என்றும் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பை ஏற்றது முதல் இந்த நாளுக்காக 2 ஆண்டுகளாக காத்திருப்பதாக தெரிவித்தார். 2 ஆண்டுகளாக ஒவ்வொரு வடிவத்திற்கான கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு வீரர்களை கண்டறிந்தாகவும் கூறினார். கடந்த 2 ஆண்டுகளில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பணிகள் மிகப்பெரியது என்று தெரிவித்த ரோகித் சர்மா, அவரின் கிரிக்கெட்டுக்கும், நாங்கள் விளையாடும் கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்றார். இந்திய அணிக்காக அவர் என்ன செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறிய ரோகித் சர்மா, இந்த உலகக்கோப்பையை அவருக்காக வெல்ல விரும்புகிறோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.