பி.சி.சி.ஐ.-யின் 2016-17-ம் ஆண்டுக்கான வீரர்களின் புதிய ஒப்பந்தப் பட்டியலில், ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, புஜாரா மற்றும் முரளி விஜய் ஆகியோர் "A" கிரேடுக்கு முன்னேறியுள்ளனர். முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா, இப்பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஆண்டுதோறும் இந்திய அணிக்கான வீரர்களை, அவர்களின் செயல்திறனைப் பொருத்து, தரம் வாரியாக ஒப்பந்தம் செய்து வருகிறது. அந்த வகையில், 2016-2017-ம் ஆண்டுக்கான 32 வீரர்கள் கொண்ட புதிய ஒப்பந்தப் பட்டியலை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.
இதில், ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரவீந்திர ஜடேஜா, புஜரா மற்றும் முரளி விஜய் ஆகியோர் "ஏ" கிரேடுக்கு முன்னேறியுள்ளனர். அவர்களுடன், விராட்கோலி, தோனி, அஸ்வின், ரஹானே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல், "B" கிரேடு வீரர்களுக்கான பட்டியலில், லோகேஷ் ராகுல், விருதிமான் சாஹா ஆகியோர் முன்னேறியுள்ளனர். அவர்களுடன், பும்ரா, யுவராஜ்சிங் ஆகியோரும் இணைந்துள்ளனர். அண்மைகாலமாக போட்டிகளில் சோபிக்காத முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதுதவிர, கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு அடிப்படை ஊதியத்தையும் இரு மடங்காக பி.சி.சி.ஐ. உயர்த்தியுள்ளது. அதன்படி, "ஏ" கிரேடு வீரர்களுக்கு 2 கோடி ரூபாயும், "B" கிரேடு வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாயும், "சி" கிரேடு வீரர்களுக்கு 50 லட்சமும் ஆண்டு ஊதியமாக வழங்கப்படவுள்ளது. இதேபோல், போட்டிகளுக்கான ஊதியமும் உயர்த்தப்பட்டு, ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் ரூபாயும், டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ரூபாயும், டி-20 போட்டிக்கு 3 லட்சம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான இந்த புதிய ஒப்பந்தப்படி, இவ்வூதியம் வழங்கப்படவுள்ளது.