2017-ம் ஆண்டுக்கான ஃபார்முலா-1 கார் பந்தயம் இன்று தொடக்கம் - 20 சுற்றுகளே நடைபெறும் என அறிவிப்பு
Mar 26 2017 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மோட்டார் பந்தய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள 2017-ம் ஆண்டுக்கான ஃபார்முலா-1 கார் பந்தயம், ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. கடந்த சீசனில் 21 பந்தயங்கள் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 20 சுற்றுகளே நடைபெறவுள்ளது.
கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற "ஃபார்முலா-1" பந்தயம், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சுற்றுகளாக உலகின் பல நாடுகளில் நடத்தப்படுகிறது. மோட்டார் பந்தய ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்பந்தயம், கடந்த ஆண்டு 21 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான "பார்முலா-1" கார் பந்தயம், ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. இப்பந்தயத்தில் இந்த ஆண்டு 20 சுற்றுகளே நடைபெறவுள்ளன. இதன் முதல் சுற்று பந்தயம், ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ என்ற பெயரில் மெல்பெர்ன் நகரில் இன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, சீனா, பக்ரைன், ரஷியா, ஸ்பெயின், கனடா, ஆஸ்திரியா, இங்கிலாந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்த சுற்றுப் பந்தயங்கள் நடைபெறுகின்றன. ஃபார்முலா-1 பந்தயத்தின் கடைசி மற்றும் 20-வது சுற்றுப் பந்தயம், அபுதாபியில் வரும் நவம்பர் மாதம் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு சாம்பியனான ஜெர்மனி வீரர் ரோஸ்பெர்க் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், கடந்த பந்தயத்தில் 2-வது இடத்தைப் பிடித்த இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன், இந்த ஆண்டு "ஃபார்முலா-1" பட்டத்தை வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், 4 முறை சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் விட்டல், ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிக்கார் டோ போன்ற வீரர்களும் சாம்பியன் பட்டத்திற்காக களமிறங்குவதால், இந்த ஆண்டு ஃபார்முலா-1 பந்தயம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.