புனே அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி - உத்தப்பா - கம்பீரின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அபார வெற்றி
Apr 27 2017 10:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புனே அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராபின் உத்தப்பா - கம்பீரின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புனேவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கு, ரஹானா - திரிபாதி இணை சிறப்பான தொடக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில், திரிபாதி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே 46 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த தோனி, 23 ரன்களிலும், திவாரி ஒரு ரன்னிலும் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அபாரமாக விளையாடிய கேப்டன் ஸ்மித் அரை சதம் விளாசினார். கடைசி கட்ட ஓவர்களில் ஸ்மித் - கிறிஸ்டியன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், புனே அணி, 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்மித், ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, சுனில்நரைன் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் இணைந்த கேப்டன் கம்பீரும், ராபின் உத்தப்பாவும், புனே பந்துவீச்சை சிதறடித்தனர்.
சிக்சரும், பவுண்டரியுமாக விளாசிய இந்த இணை, 2-வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. இவ்விருவரின் அதிரடி ஆட்டத்தால், கொல்கத்தா அணி, 19-வது ஓவரின் முதல் பந்திலேயே 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு வித்திட்ட ராபின் உத்தப்பா, ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.