ஐ.சி.சி. நிர்வாக மாற்றம் மற்றும் வருமான பகிர்வு குறித்து நடந்த வாக்கெடுப்பில் பி.சி.சி.ஐ. தோல்வியை சந்தித்துள்ளது : சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு பெரும் பின்னடைவு
Apr 27 2017 10:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.சி.சி. நிர்வாக மாற்றம் மற்றும் வருமான பகிர்வு குறித்து நடந்த வாக்கெடுப்பில், பி.சி.சி.ஐ. தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த சீனிவாசன், பி.சி.சி.ஐ., ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகளுக்கு வருமானத்தில் அதிக பங்கு மற்றும் நிர்வாகத்தில் அதிக முக்கியத்துவம் இருக்கும்படி, கடந்த 2014-ம் ஆண்டு மாற்றம் கொண்டு வந்தார். பின்னர், சஷாங் மனோகர் தலைவராக பொறுப்பேற்றவுடன், இதனை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்கான பரிந்துரைகளுக்கு பி.சி.சி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
எனினும், நிர்வாக முறைகளில் மாற்றம் செய்வது, வருமான பகிர்வு குறித்த புதிய பரிந்துரைகளுக்கு அனுமதி பெறுவதற்காக, துபாயில் ஐ.சி.சி. கூட்டம் நடைபெற்றது. இதில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், நிர்வாக முறையில் மாற்றம் செய்வது குறித்த தீர்மானம், ஒன்பதுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வாக்கெடுப்பில், இந்தியாவை தவிர, மற்ற நிரந்த உறுப்பினர்களான 9 அணிகளும் ஐ.சி.சிக்கு ஆதரவாக வாக்களித்தன. அடுத்து, வருமான பகிர்வு குறித்த தீர்மானமும், எட்டுக்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில், இந்தியாவுக்கு இலங்கை மட்டுமே ஆதரவாக இருந்தது. இந்த முடிவுகள், ஐ.சி.சி.க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. அதேநேரம், சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியாவுக்கு, இந்த முடிவுகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.