நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவேசம் - டி.வி.க்களை உடைத்து கிரிக்கெட் வீரர்களின் உருவப்படங்கள் எரிப்பு - சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்
Jun 19 2017 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பைனலில், பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், லண்டன் மற்றும் நாடுமுழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆத்திரத்தில் டிவிகளை உடைத்தனர். ஆவேசமடைந்த ரசிகர்கள் வீரர்களின் உருவப்படங்களை எரித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால், ஆத்திரமடைந்துள்ள ரசிகர்கள் இந்திய அணியை விமர்சித்து சமூக வலைதளங்களில் தங்களது காரசாரமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சில ரசிகர்கள் தோற்றாலும், ஜெயித்தாலும் இந்திய அணியின் பக்கம் நிற்போம் என ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் வீட்டின் முன்பு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், இந்திய வீரர்களின் வீடுகளின் முன்பு பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய அணி தோல்வியடைந்ததன் எதிரொலியாக உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் உத்தரகண்ட் மாநிலம் ஹிரித்துவாரில் ரசிகர்கள் தங்கள் வீட்டிலிருந்த டிவிகளை உடைத்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பல்வேறு பகுதிகளில் வீரர்களின் உருவப்படங்களை எரித்தனர். சில இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.