வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? - போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை
Jun 23 2017 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின், முதல் ஆட்டம் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டுவென்டி-20 போட்டியில் பங்கேற்கிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டம், டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில், இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இத்தொடரில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விருவருக்குப் பதிலாக அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான இளம் வீரர் ரிஷப் பாண்ட், சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். அண்மையில் முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில், கேப்டன் கோலி - பயிற்சியாளர் கும்ப்ளே இடையிலான கருத்து மோதல் காரணமாகவே, பாகிஸ்தான் அணியிடம் இந்தியா படுதோல்வி அடைந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், பயிற்சியாளர் பதவியிலிருந்தும் கும்ப்ளே விலகியுள்ளதால், இத்தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு கோலி தலைமையிலான இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடர், இந்திய அணிக்கு பெரும் பலப்பரீட்சையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.