இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா : மும்பையில் BCCI சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம்
Jun 26 2017 8:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்துள்ள நிலையில், மும்பையில் இன்று BCCI சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் முடிவடைந்ததும், தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ளேவின் பதவிக்காலமும் முடிவடைந்தது. எனினும், இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமானபோது, கும்ளேவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டு, அணியுடன் கும்ளேவும் உடன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லண்டனிலேயே தொடர்ந்து தங்கியிருந்த கும்ளே, தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். பயிற்சியாளராக தான் செயல்பட்ட விதத்தில் கேப்டன் விராத் கோலி ஐயப்பாடு கொண்டிருந்தார் என கும்ளே பின்னர் தெரிவித்தார்.
இந்நிலையில் BCCI-யின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், கும்ளே விவகாரம் சேர்க்கப்படவில்லை என்றாலும் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ளே விலகுவதற்கான சூழ்நிலை குறித்து, BCCI-யின் தற்போதைய செயலாளர் திரு. அமிதாப் செளத்ரி மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு ராகுல் ஜோரி ஆகியோரிடம், கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கேள்வியெழுப்புவார்கள் என மாநில கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய கூட்டத்தில், BCCI தேர்தலில் ஒரு மாநிலத்தில் ஒரு கிரிக்கெட் சங்கத்திற்கு மட்டுமே ஓட்டுரிமை, தேர்வுக்குழுவில் மீண்டும் 5 உறுப்பினர்கள் இடம்பெறுதல் உள்ளிட்டவை முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.