தமிழக வீரர் மாரியப்பன் உட்பட 17 பேருக்கு அர்ஜுனா விருது - விளையாட்டு அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அறிவிப்பு
Aug 23 2017 10:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், ஆரோக்யராஜீவ், அமல்ராஜ் உள்ளிட்ட 17 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் கேல்ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை முன்னாள் நீதிபதி சி.கே.தாக்கர் தலைமையிலான கமிட்டி தேர்வு செய்து, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி இருந்தது. இதற்கு ஒப்புதல் அளித்து விருது பட்டியலை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதை, மாற்றுத்திறனாளி ஈட்டிஎறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் ஆகியோர் இணைந்து பெறுகிறார்கள். பாரா ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவர், ராஜஸ்தானை சேர்ந்த ஜஜாரியா. மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் கேல்ரத்னா விருதுக்கு தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். ரியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன், திருச்சியை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் ஆரோக்யராஜீவ், சென்னையைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா ஆகியோருக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Bhupender Singh உள்பட மூன்று பேருக்கு தயான் சந்த் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் டாக்டர். R. Gandhi, Heera Nand Kataria உள்ளிட்ட ஏழு பேருக்கு சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.