பராமரிப்பு மற்றும் தொழில் நுட்ப வசதிகளின்றி காணப்படும், கோவை நேரு விளையாட்டரங்கில், பயிற்சிபெறும் வீரர் வீராங்கனைகள், எதிர் வரும் போட்டிகளில் பங்கேற்று, சவால்களை சந்திக்க பின் தங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு துறையில் சென்னைக்கு அடுத்த மாவட்டமாக திகழும் கோவையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தடகளம் மற்றும் கால்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர். விளையாட்டு துறையை மேம்படுத்த, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக, ஏழை விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பயன்பெற்று, மாநில அளவில் மட்டுமல்லாது தேசிய அளவில் சாதனைகள் புரிந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
மாவட்ட விளையாட்டு போட்டிகள் முதல், ஒலிம்பிக் போட்டிகள் வரை வெற்றி பெரும், வீரர்களுக்கு மறைந்த மாண்புமிகு அம்மா, அறிவித்த பரிசு தொகைபோல் ,வேறு எந்த மாநில முதல்வர்களும் அறிவித்ததில்லை, இதன் காரணமாக, பயிற்சி பெரும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை, நாள்தோறும் உயர்ந்த வண்ணம் உள்ளது. ஆனால், அதற்கேற்ற பயிற்சி மைதானங்களோ, உபகரணங்களோ, போதிய அளவில் இல்லை.
குறிப்பாக 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நேரு விளையாட்டரங்கில் அமைக்கப்பட்ட செயற்கை ஓடு தளப்பாதை, முறையான பராமரிப்பு மற்றும் தண்ணீர் தெளிக்காததால், அதன் தரத்தை இழந்து காணப்படுவதோடு, பல இடங்களில் பெயர்ந்தும் , கிழிந்தும் காணப்படுகிறது. மேலும், மைதானத்தில் பயிற்சிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கென உடை மாற்றும் அறைகளோ, அவர்களுக்கு தேவையான கழிப்பிட வசதிகளோ இல்லை. இதனால், தங்களால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெறுவது கடினம் என்றும், அம்மாவின் கனவுத்திட்டங்கள் கானல்நீராக்கி வரும் அரசுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, கோவையில் விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில், மறைந்த அம்மா அவர்கள் அறிவித்த பல திட்டங்கள், கிடப்பில் போடப்பட்டுள்ளன. நீச்சல் குளம் மற்றும் துப்பாக்கி சுடும் தளம் ஆகியவை கானல் நீராகவே உள்ளது.