பி.சி.சி.ஐ. விதிமுறை மாற்றம் குறித்து ஆலோசனை தெரிவிக்கும்படி நீதிமன்றம் அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் : உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
Sep 22 2017 9:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பி.சி.சி.ஐ. விதிமுறை மாற்றம் குறித்து ஆலோசனை தெரிவிக்கும்படி நீதிமன்றம் அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
லோதா கமிட்டி சிபாரிசுகளை முழுமையாக அமல்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறையை மாற்றி அமைத்து அதன் வரைவை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
பி.சி.சி.ஐ. விதிமுறையை மாற்றுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தங்களது ஆலோசனையை தெரிவிக்கும் படி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டியினர் கேட்டு இருந்தனர். ஆனால் பி.சி.சி.ஐ. விதிமுறை மாற்றம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஆலோசனை சொல்லாமல் இழுத்தடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு தலைவர் திரு. சி.கே.கண்ணா, பொறுப்பு செயலாளர் திரு.அமிதாப் சவுத்ரி, பொருளாளர் திரு.அனிருத் சவுத்ரி ஆகியோருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பி.சி.சி.ஐ. விதிமுறை மாற்றம் குறித்து ஆலோசனை தெரிவிக்கும்படி கோர்ட்டு அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.