சிங்கப்பூரில் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி : கரோலினா பிளிஸ்கோவா, கார்பின் முகுருஜா வெற்றி
Oct 23 2017 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் லீக் பிரிவில், கரோலினா பிளிஸ்கோவா, கார்பின் முகுருஜா ஆகியோர் வென்றனர்.
உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. 29-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் ரெட், ஒயிட் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பர். 'ரெட்' பிரிவில் ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், உக்ரைனைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினா, டென்மார்க்கைச் சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கரோலின் கார்சியா ஆகியோரும், 'ஒயிட்' பிரிவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்பின் முகுருஜா, செக் குடியரசைச் சேர்ந்த கரோலினா பிளிஸ்கோவா, அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ், லாத்வியாவைச் சேர்ந்த ஜெலினா ஆஸ்டாபென்கோ ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பெறும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
ஒயிட் பிரிவில் நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசை சேர்ந்த கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-2 என்ற நேர்செட்டில் 5-வது இடத்தில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்சை தோற்கடித்தார்.
மற்றொரு லீக் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 7-வது இடத்தில் உள்ள லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவை வென்றார்.