சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமை அளிக்கிறது : சென்னை எனக்கு இரண்டாவது வீடு என தோனி புகழாரம்
Jan 19 2018 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமை அளிப்பதாகவும், சென்னை தனது 2-வது வீடு என்றும், மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், நட்சத்திர அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக் காலம் முடிவடைந்து, இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் மீண்டும் களமிறங்குகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனியே, இந்த ஆண்டும் அந்த அணியின் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் விதியின்படி, இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 வீரர்களையும் தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று நிகழ்ச்சிஒன்றில் கலந்துகொண்ட தோனி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமையாக இருப்பதாகவும், சென்னை தனக்கு 2-வது வீடு எனவும் குறிப்பிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தோனி கூறினார்.
சென்னை அணி வீரர்கள் எப்பொழுதுமே தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தியதாகவும், கடினமான தருணங்களை சிறப்பாக எதிர் கொண்டிருப்பதாகவும் தோனி தெரிவித்தார்.