பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா மீண்டும் சாம்பியன் - பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வீரர்களுக்கு பாராட்டு
Jan 22 2018 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றிருப்பதை பிரதமர் உள்ளிட்ட பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள சார்ஜாவில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான், நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுக்கு 308 ரன்களைக் குவித்தது. பின்னர் கடினமான இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய இந்தியா, முதல் விக்கெட்டுக்கு 111 ரன்களை குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தது. அதைத் தொடர்ந்தும் அணியின் ரன் எண்ணிக்கை சீராக உயர்ந்தது. சுனில் ரமேஷ் மிகச்சிறப்பாக விளையாடி 93 ரன்கள் குவித்தார். கேப்டன் அஜய் 62 ரன்கள் எடுத்தார். இதனால், 39 ஓவரிலேயே இந்தியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 309 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 2வது முறையாக இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு.மோடி உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த வெற்றி மூலம் இந்திய அணியினர் நாட்டிற்கு பெருமை தேடி தந்திருப்பதாகவும், ஒவ்வொரு இந்தியருக்கும் இது தூண்டுதலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.