பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களின் ஓய்வூதிய தொகை இரண்டு மடங்காக உயர்வு : மத்திய விளையாட்டு துறை அமைச்சர் தகவல்
Feb 10 2018 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களின் ஓய்வூதிய தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் திரு. ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், பதக்கங்கள் வென்ற சிறந்த விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கான ஓய்வூதியம் 8 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரம் ரூபாயாகவும், பாராலிம்பிக் வீரர்களின் ஓய்வூதியமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டு துறைக்காக கடந்த சில ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டு வரும் நிதி தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்த மாநிலங்களில் இருந்து பல்வேறு சாம்பியன்கள் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விளையாட்டை மேம்படுத்தவும், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் சிறப்பு நிதியாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.