இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் - பங்களாதேஷுக்கு எதிரான பரபரப்பான இறுதி ஆட்டத்தில் அணிக்கு வெற்றி தேடிதந்த தினேஷ்கார்த்திக்
Mar 19 2018 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான இறுதி ஆட்டத்தில், தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்சர் அடித்ததன் மூலம், இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது.
இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து, நேற்று நடைபெற்ற போட்டியில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் வங்காளதேசத்தை பேட் செய்ய அழைத்தார். இதனையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களம் இறங்கினர். ஷிகர் தவான் 10 ரன்களுடனும், அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா ரன் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தனர். இதன் பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலுடன் கூட்டணி அமைத்து சரிவை தடுத்து நிறுத்தினார். இதனால், ரோகித் சர்மா 56 ரன்கள் குவித்தார். பின்னர் அவரும் அவுட்டாகி வெளியேறியதால், மனிஷ் பாண்டே மற்றும் ஆல்-ரவுண்டர் தமிழக வீரர் விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்தனர். ஆனால், மனிஷ் பாண்டே 28 ரன்களில் அவுட்டானார். இதனால், நெருக்கடியில் சிக்கித் தவித்த இந்திய அணிக்கு, கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் ரன் குவித்தார். ஆனால், கடைசி பந்தில், 5 ரன்கள் தேவை பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.