காமன்வெல்த் விளையாட்டில் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்-வீராங்கனைகள் தாயகம் வருகை - விளையாட்டு ரசிகர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு
Apr 17 2018 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்-வீராங்கனைகள் தாயகம் திரும்பியுள்ளனர். தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சுஷில்குமார் உள்ளிட்ட வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு ரசிகர்களும், அதிகாரிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் நிறைவுபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்திய அணி அதிக பதக்கங்களைக் குவித்து 3ம் இடம் பிடித்தது. பதக்கங்களை தாயகத்திற்கு பெருமைசேர்த்த வீரர், வீராங்கனைகள் தயாகம் திரும்பி வருகின்றனர். நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்த தமிழகத்தின் ஸ்குவாஷ் வீராங்கனைகளான தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகிய இருவரையும் விளையாட்டுத்துறை அதிகாரிகளும், ரசிகர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர். தாய்நாட்டிற்காக பதக்கம் வென்றது தங்களுக்கு பெருமை அளிப்பதாக அப்போது அவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
இதேபோல், மல்யுத்த வீரர் சுஷில்குமார், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மாணிக்கா பத்ரா உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகளும் தாயகம் திரும்பினர். டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய அவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மல்யுத்தத்தில் தங்கம் வென்ற சுஷில்குமார், பிரபல யோகா கலை நிபுணரான பாபா குரு ராம்தேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, சுஷில்குமாருக்கு கிடைத்த தங்கப்பதக்கத்தை அவருக்கு அணிவித்து பாபா ராம்தேவ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.