ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி
May 11 2018 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 18 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக ஹைதராபாத் முன்னேறியுள்ளது.
11-வது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் வகையில் தீவிரம் காட்டி வருகின்றன. டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற லீக் போட்டியில், ஹைதரபாத் அணி, டெல்லி டேர் டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்த் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
188 ரன்கள் வெற்றி இலக்குடன் பின்னர் விளையாடிய ஐதராபாத் அணியில், தொடக்க வீரர் ஹேல்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த ஷிகார் தவான் - கேப்டன் வில்லியம்சன் ஜோடி, அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து டெல்லி அணி வீரர்களை திணறடித்தது. இதனால், 18 புள்ளி 5 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது. சிகார் தவான் 92 ரன்களும், வில்லியம்சன் 83 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த ஐதராபாத் அணி, பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதேசமயம், தொடர் தோல்விகளால் டெல்லி அணி பிளே-ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.