மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிபோட்டி - ஹைதராபாத்தை தோற்கடித்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை அணி- ஷேன் வாட்சன் அதிரடியாக சதம் அடித்து அசத்தல்
May 28 2018 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில், ஹைதராபாத் அணியை தோற்கடித்து, சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டுபிளசிஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, வாட்சனுடன் இணைந்து, ஐதராபாத் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வாட்சன் 57 பந்துகளில் 8 சிக்சர், 11 பவுண்டரியுடன் 117 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இறுதியில், சென்னை அணி 18 புள்ளி 3 ஓவரில், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 181 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், சென்னை அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர். வெற்றிபெற்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. சதம் அடித்த ஷேன் வாட்சன், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.