ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது சாதனையை தானே முறியடித்து அபாரம்
Jun 20 2018 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 242 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று, புதிய சாதனை படைத்தது. இந்த போட்டியில் 481 ரன்களை குவித்த இங்கிலாந்து தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்று, முன்னிலை பெற்றது. இந்நிலையில், நேற்று நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று இங்கிலாந்து அணியை பேட் செய்ய வைத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அனைவரையும் மிரள வைத்து ரன்மழை பொழிந்தனர். அந்த அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களான பேர்ஸ்டோ 139 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 147 ரன்களும் குவித்தனர். ஜேசன் ராய் 82 ரன்களும், மார்கன் 67 ரன்களும் விளாசினர். 50 ஓவர்களின் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 481 ரன்களைக் குவித்து, ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து அணி என்ற புதிய சாதனையை படைத்தது. இதன் மூலம் ஏற்கெனவே தான் படைத்த சாதனையை அந்த அணி முறியடித்தது.
482 என்ற கடினமான இலகுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களின் நேர்தியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி, 37 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 239 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியின் ட்ராவிஸ் ஹெட் மட்டும் அதிகபட்சமாக 51 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.