டேக்வான்டோ தற்காப்பு கலையில், மதுரையைச் சேர்ந்த நாராயணன்-ஸ்ருதி என்ற இளம் தம்பதியினர் சாதனை படைத்துள்ளனர்.
நவீனமாகி வரும் அறிவியல் உலகில் பெண்கள் தலைநிமிர்ந்து அரிய பல சாதனைகளை படைத்து, தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். ஆண்களின்றி, எதுவானாலும் செய்ய இயலும் என்று, தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு அடியையும், வாழ்வின் முன்னேற்றத்துக்காக எடுத்து வைத்து, பல்லாயிரம் சாதனை மையில் கல்லை கடந்துள்ளனர்.
தடுத்து நிறுத்திய தடைகளையும் தகர்த்தெரிந்து, பல்லாயிரம் சோதனைகளை கடந்து, மறுக்கப்பட்ட உரிமைகளை போராடி பெற்று வருகின்றனர். விஞ்ஞானம் முதல் விளையாட்டு வரை அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்று, வராலாற்றில் தடம் பதிக்கின்றனர்.
சாதிக்கத் துடிக்கும் சாதனை பெண்களுக்கு திருமணம் என்பது தடையாகவே காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனாலும், அந்த தடைகற்களை உடைத்தெரிந்து, டேக்வான்டோ என்ற தற்காப்பு கலையில் சிறந்து விளங்கி, சாதனைப் பெண்ணாக மின்னுகிறார் மதுரையைச் சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்மணி.
பார்வைக்கு மெல்லியவராய் காட்சி அளித்து, குடும்பத்தலைவி என்ற பொறுப்புடன் வளம் வரும் ஸ்ருதியின் திறமையை கண்முன் காணும்போது ஏற்படும் ஆச்சரியங்களை சொல்லி அடங்காது. தற்காப்பை ஏற்படுத்தும் வகையில், ஸ்ருதி தனது கால்களை உயர்த்தி, ஓங்கி அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டுகளிலும், சப்தங்களோடு சாதனையும் சேர்ந்தே ஒலிக்கிறது.
அன்னை என்றொரு பெண்ணாய், தாய்மை அடைந்தபோது, அறுவை சிகிச்சை செய்தார் ஸ்ருதி. உடல் வலிமை தளர்ந்தபோதும், துவண்டு விடாமல், துள்ளி எழுந்து, தனது கணவருக்கு நிகராக ஈடு கொடுத்து, சாதனைக்கு சொந்தக்காரனார்.
ஆணுக்கு நிகர் பெண்கள், உலகில் பிறந்த அனைவரும் சமம் என்று கருதுபவர் ஸ்ருதியின் கணவர் நாராயணன். புதுமை படைக்கத் துடித்த தனது மனைவிக்கு, தகுந்த இணையாளராக மட்டும் இல்லாமல், சிறந்த குருவாகவும் விளங்கி வருகிறார்.
ஒருவரை, ஒருவர் புரிந்து வாழ்ந்து வரும் நாராயணன்- ஸ்ருதி தம்பதியினர், ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போட்டிகள் கலந்து கொண்டு, வெற்றிக் காற்றை மட்டும் சுவாசித்தனர். உலக சாதனை படைக்காமல், தங்களின் வெற்றித் தாகம் தீராது என்று எண்ணிய இருவரும், அதற்கான களத்தை தீர்மானித்தனர். தங்களது திறமையால், உலகிலேயே டேக்வான்டோ போட்டியில் கின்னஸ் சாதனை படைத்த இளம் தம்பதியினர் என்ற பெயரையும் பெற்றுள்ளனர்.
இப்படிப்பட்ட சாதனையாளர்கள், தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் பரவி இருக்கின்றனர். அவர்களை கண்டறிந்து, ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.