ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2-வது முறையாக ஃபிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனை அந்நாட்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
மாஸ்கோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற உலக்கோப்பை கால்பந்துப்போட்டியின் இறுதியாட்டத்தில், 4-க்கு இரண்டு என்ற கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்து, ஃபிரான்ஸ் கோப்பையை வென்றது. இந்தப் போட்டியை, மாஸ்கோ நகரில் பிரமாண்ட திரையில் கண்டுகளித்த ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், தங்கள் நாடு, 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றதை ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல், ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் முன்பு, அகன்ற திரையில் போட்டியை கண்டுகளித்த லட்சக்கணக்கான பொதுமக்கள், 20 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் நாடு உலகக்கோப்பை வென்றதை, பட்டாசு வெடித்தும், விண்ணதிர கரவொலி எழுப்பியும் உற்சாகத்தில் திளைத்தனர். மேலும், பாரீஸ் நகர சாலையில் திரண்ட நூற்றுக்கணக்கானோர், கைகளில் தேசியக் கொடியுடன் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல், Marseille Zagreb நகரங்களில் வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
இதனிடையே, 20 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் நாடு உலகக்கோப்பை வென்றதை, பட்டாசு வெடித்தும், உற்சாக குரலெழுப்பி, நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்கள் சிலர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது கற்களையும் வீசினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வன்முறையை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியெறிந்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேபோல், ஃபிரான்ஸ் நாட்டு மக்கள் அதிகம் வாழ்ந்து வரும் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், உலகக்கோப்பை கால்பந்து போட்டியை அகன்ற திரையில் கண்டுகளித்த பொதுமக்கள், சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸின் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல்,டெல்லியிலுள்ள ஃபிரான்ஸ் தூதரகம் மற்றும் கொல்கத்தாவில் கால்பந்தாட்ட ரசிகர்கள் இறுதிப்போட்டியை கண்டுகளித்தனர்.
இதனிடையே, உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஃபிரான்ஸ் அணிக்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், குரோஷியா அதிபர் கோலிண்டா கிராபர் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், இந்திய குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு.நரேந்திரமோடி, மற்றும் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கோப்பையை வென்ற ஃபிரான்ஸ் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.