ஜகார்த்தா ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் தங்கம் பதக்கம் வென்றது இந்தியா - ஆடவர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அபாரம்
Aug 20 2018 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, முதல் தங்கம் பதக்கத்தை வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2-வது நாளில், மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆடவர்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில், பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை, பஜ்ரங் புனியா எதிர்கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்டு, 11-8 என ஜப்பான் வீரரை வீழ்த்தி, பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசியா ஆசியக் கோப்பையில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
இதனிடையே, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு, அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.