ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் விளையாட்டில் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம் வென்றுள்ளனர். தொடர்ந்து இந்திய வீரர் - வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்தோனேஷியாவில் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்கள், தொடர்ந்து தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான இலகுரக துடுப்பு படகு போட்டியின் 4 பேர் அடங்கிய குழு பிரிவில், இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. Sawaran Singh, Dattu, Om Prakash மற்றும் Sukhmeet Singh ஆகியோர் அடங்கிய இந்திய குழுவினர் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்று அசத்தினர். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 நிமிடம் 17 புள்ளி ஒன்று மூன்று வினாடிகளில் கடந்து இந்திய குழு சாதனை படைத்தது.
இதேபோல், ஆடவருக்கான இலகுரக துடுப்பு படகு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் Rohit Kumar - Bhagwan Das ஜோடி, திறமையாக செயல்பட்டு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியது.
முன்னதாக நடைபெற்ற ஆடவருக்கான இலகுரக துடுப்பு படகு ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கம் வென்றார். இவர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, 7 நிமிடம் 18 புள்ளி ஏழு ஆறு வினாடிகளில் கடந்து பதக்கம் வென்றார்.
டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபன்னா -திவிஜ் சரண் இணை, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது.
இதனிடையே, மகளிருக்கான 10 மீட்டர் 'ஏர் ரைபிள்' பிரிவு துப்பாக்கிசுடுதல் போட்டியில், இந்தியாவின் Heena Sidhu சிறப்பாக செயல்பட்டு 219.2 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
தொடர்ந்து இந்திய வீரர் - வீராங்கனைகள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, பதக்க வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மகளிர் கபடிப் போட்டியில் இந்தியா-ஈரான் அணிகள் மோதின. இதில் 27-24 என்ற கணக்கில் ஈரான் வெற்றி பெற்றது. இதன்மூலம் இப்போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.