ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் போர் பயிற்சி : கைப்பந்து போட்டியில் பாக். ராணுவத்தை வீழ்த்திய இந்திய ராணுவம்
Aug 28 2018 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷியாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள், பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியின், ஒரு பகுதியாக, நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.
பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்து போராடுவதை முக்கிய நோக்கமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சமீபத்தில் சீனாவில் நடைபெற்றது. இதையொட்டி, பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சி ரஷியாவில் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, உறுப்பு நாடுகளின் ராணுவ வீரர்கள் பங்கேற்கும் கைப்பந்து போட்டி, கை மல்யுத்தம், நீச்சல் போட்டி உள்பட பல விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ வீரர்கள் பங்கேற்ற கைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 3 - 0 எனும் கணக்கில் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக ரஷிய வீரர்களும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீன வீரர்களும் விளையாட்டில் ஆதரவளித்து உற்சாகப்படுத்தினர்.