ஆசியகோப்பை கிரிக்கெட் : 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அபார வெற்றி
Sep 20 2018 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியா 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. புவனேஷ்வர் குமாரின் அதிரடி பந்துவீச்சில், தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனையடுத்து களமிறங்கிய வீரர்களும், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாததால், அடுத்தடுத்து பெவிலியன் திரும்பி பாகிஸ்தான் அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தனர். அதிகபட்சமாக ஆசம் 47 மற்றும் சோயப் மாலிக் 43 ரன்கள் அடித்து, ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 44 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்குமார் மற்றும் கேதர் ஜாதவ் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணிக்கு ஸ்கோரை உயர்த்தினர். அரை சதம் அடித்த ரோகித் சர்மா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை அடுத்து தவான் 46 ரன்கள் எடுத்த நிலையில், கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஜோடி, விக்கெட்டுக்களை இழக்காமல் ரன்களை சேர்த்தது.
இதனால், இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ராயுடு 31 ரன்களுடனும் தினேஷ் கார்த்திக் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அஷ்ரப் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்த லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அஃப்கனிஸ்தான் அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளன. வரும் 23-ம் தேதி நடைபெறும் சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானுடன் இந்திய அணி மீண்டும் மோதுகிறது.