நாகையில் நடைபெற்ற அகில இந்திய பள்ளிகளுக்கிடையேயான பீச் வாலிபால் போட்டியில், தமிழக பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாகப்பட்டினத்தில் அகில இந்திய பள்ளிகளுக்கிடையேயான பீச் வாலிபால் போட்டிகள் 4 நாட்களாக நடைபெற்று வந்தன. இப்போட்டியில் டெல்லி, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த 49 அணிகள் பங்கேற்றன. 19 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் தமிழ்நாடு அணி, தெலங்கானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதேபோல், மாணவர் பிரிவில் தமிழ்நாடு அணியை, டெல்லி அணி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற வீரர்கள், இந்திய அணி சார்பில் சர்வதேச அளவில் பள்ளிகளுக்கிடையேயான பீச் வாலிபால் போட்டியில் விளையாட உள்ளனர்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்தும் தமிழ்நாடு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. வயதுகளின் அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதியில், 24 மாணவர்கள், 24 மாணவிகள் என 48 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தமிழக அணி சார்பில் வரும் டிசம்பர் மாதத்தில் கர்நாடாகவின் பெல்காம் என்ற இடத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி கிராமத்தில், நேரு கோப்பைக்கான 33-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது. சென்னை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், செங்கம், தர்மபுரி, சேலம், திண்டுக்கல், நாமக்கல், கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 36 ஹாக்கி அணிகள் கலந்துகொண்டுள்ளன. நாக் அவுட் முறையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், வெற்றி பெறும் அணிகளுக்கு நினைவு கோப்பைகளும், ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில் 10-ம் ஆண்டு மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 35 வயது முதல் 85-வது வரை உள்ள ஆண்கள், பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், உட்பட 19 போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 280 ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இந்த தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த மாதம் தஞ்சாவூரில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள்.