ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடரை வென்றது இந்தியா - 2-1 என்ற கணக்கில் இந்திய அபார வெற்றி
Jan 18 2019 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்த நிலையில், கோப்பயை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி மெல்பர்னில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 230 ரன்கள் எடுத்தது.
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில், ரோஹித் ஷர்மா 9 ரன்களுடனும், ஷிகர் தவான் 23 ரன்களுடனும், விராட் கோலி 46 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து, தோனியுடன் இணைந்த கேதார் ஜாதவ், அதிரடியாக விளையாடினார். 49 புள்ளி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது. தோனி 87 ரன்களுடனும், ஜாதவ் 61 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிறப்பாக பந்துவீசி, 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆட்ட நாயகனாகவும், 3 போட்டிகளிலும் அரை சதம் அடித்த தோனி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம், ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை புரிந்துள்ளது.