உலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் - முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்
Aug 26 2019 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டியின் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, முதல்முறையாக தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
சுவிட்சர்லாந்தின் லாசர் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன் பட்டத்திற்கான பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், முன்னாள் உலக சாம்பியனும், 4-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை, இந்தியாவின் பி.வி. சிந்து எதிர்கொண்டார். தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சிந்து, முதல் செட்டை 21-க்கு 7 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் இரண்டாவது செட்டிலும், சிந்துவின் அதிரடி ஆட்டத்துக்கு ஜப்பானின் நஜோமி ஒகுஹராவா ஈடுகொடுக்க முடியாததால், 21-க்கு 7 என்ற நேர் செட்டில் பி.வி. சிந்து அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் முதல் முறையாக உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பி.வி. சிந்து.
உலக பேட்மிண்டனில் முதல்முறையாக பி.வி. சநித்து தங்கம் வென்று சாதனை படைத்ததைக் கொண்டாடும் வகையில், ஹைதராபத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த அவரது தாயார் விஜயா, பி.வி.சிந்துவின் கடின முயற்சிக்கு பலன் கிடைத்தது என்றும், தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். தங்க பதக்கத்தைக் காண மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பி.வி.சிந்துவின் வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்த சாதனை மூலம்
பி.வி.சிந்து தனது திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார் என்றும், இந்தியாவிற்கு மீண்டும் ஒருமுறை அவர் பெருமையை சேர்த்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பேட்மிண்டனில் பி.வி. சிந்து வைத்துள்ள பேரார்வமும், அர்ப்பணிப்பும், புதிய தலைமுறை வீரர்களை ஊக்குவிக்கும் எனவும் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.