தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 2-வது சர்வதேச டி20 போட்டி : இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
Sep 19 2019 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில், இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, மூன்று சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன்படி, ஹிமாச்சல பிரதேச மாநிலம், தரம்சலாவில் நடைபெறவிருந்த முதலாவது டி20 போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று, பஞ்சாப் மாநிலம், மொகாலியில், நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, முதலில், தென் ஆப்ரிக்க அணியை பேட் செய்யும்படி அழைத்தார்.
முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி, 20 ஓவர்களுக்கு, 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணியில், அதிகபட்சமாக, கேப்டன் குயின்டன் டி காக், 52 ரன்கள் எடுத்தார்.
இதன்பின் விளையாடிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவருக்கு பின், கேப்டன் விராத் கோஹ்லி அரைசதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு எளிதாக அழைத்துச் சென்றார். இந்திய அணி, 19 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் விராத் கோஹ்லி, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.