கால்பந்து போட்டிகளைக் காண பெண்களை அனுமதிக்க வேண்டும் : ஈரான் அரசுக்கு FIFA அமைப்பு வலியுறுத்தல்
Sep 20 2019 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கால்பந்துப் போட்டிகளைக் காண, பெண்களையும் மைதானத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என ஈரான் அரசை FIFA எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
கால்பந்து விளையாட்டுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். உலகக் கோப்பை, ஐரோப்பிய கோப்பை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகள், கால்பந்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகின்றன. இந்நிலையில், ஈரான் நாடும், உலகின் மிகச் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. அந்நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்துப் போட்டிகளை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர். ஆனால், பெண்கள் மைதானத்திற்கு வந்து போட்டிகளைக் காண ஈரான் அரசு தடை விதித்துள்ளது. 1979-ம் ஆண்டுமுதல், ஈரானில் நடைபெற்று வரும் கால்பந்துப் போட்டிகளைக் காண ஆண்களுக்கும், வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்களையும் கால்பந்துப் போட்டியைக் காண அனுமதிக்க வேண்டும் என ஏராளமான பெண்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக, கால்பந்துப் போட்டிகளைக் காண, ஈரான் அரசு பெண்களை அனுமதிக்க வேண்டும் என FIFA எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனமும் வலியுறுத்தியுள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் நடத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக ஈரான் சென்றுள்ள FIFA நிர்வாகிகள், கால்பந்து மைதானத்திற்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை ஈரான் அரசிடம் முன்வைக்க உள்ளனர்.