19 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவில் பூப்பந்தாட்ட போட்டி : தமிழக அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு
Oct 1 2019 10:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூரில், 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவிலான பூப்பந்தாட்ட அணிக்கு தமிழக அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய அளவில் 19 வயதிற்குட்பட்ட பூப்பந்தாட்ட தமிழக அணிக்கான ஆண்கள் மற்றும் பெண்களை தேர்வு செய்யும் போட்டி அரியலூரில் நடைபெற்றது. ஆடவர் பிரிவில் அரியலூர், தஞ்சாவூர், சென்னை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மகளிர் பிரிவில் மதுரை, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அணியினர் வரும் நவம்பர் மாதம் ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.
திருச்சியில், மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டி நடைபெற்றது. திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து 14 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் திருச்சி எம்.ஏ.எம். பாலிடெக்னிக் கல்லூரி, கரூர் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியை 25-19, 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்ததுடன், மண்டலங்களுக்கு இடையிலான பாலிடெக்னிக் கல்லூரி அளவில் நடைபெறும் வாலிபால் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
திருப்பூர் அருகே தாராபுரத்தில், தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜபுரம் பகுதி மக்கள் சார்பில், மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. திருப்பூர், தஞ்சாவூர், நீலகிரி, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. கலையமுத்தூர் கலைவாணர் அணியினர் சிறப்பாக விளையாடி முதல் பரிசை வென்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழல்கோப்பை வழங்கப்பட்டன.