மாவட்ட அளவிலான விளையட்டு போட்டியில் மாணாக்கர் ஆர்வமுடன் பங்கேற்பு : வெற்றிபெற்றவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகளில் வாய்ப்பு
Oct 18 2019 9:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஏராளமான மாணவ,மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 2019-20 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியினை மாவட்ட விளையாட்டு அலுவலர் துவக்கி வைத்தார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்து, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100மீட்டர், 200மீட்டர், 1500மீட்டர் ஓட்டபந்தயங்கள் மற்றும் தடை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. காலை முதல் மாலைவரை நடைபெற்ற இப்போட்டிகளில் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் திரளாக பங்கேற்றிருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கிய போட்டிகளில் தடகளம், நீச்சல், கையுந்து பந்து மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதேபோல் தடகளப் பிரிவில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட இரு பாலருக்கும் தனித்தனியே சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான மாணவ,மாணவியர் கலந்துகொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.