ராஞ்சியில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தென்னாப்பிரிக்காவை வென்றது இந்தியா - மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அபாரம்
Oct 22 2019 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா தொடரை முழுமையாக வென்றது.
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில், ரோகித் சர்மாவின் அதிரடி இரட்டை சதத்தால்,இந்திய அணி, 497 ரன்களுக்கு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், முதல் இன்னிங்சில், 162 ரன்களுக்கு அந்த அணி ஆல்அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி, பாலோ ஆன் ஆனதால், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது.
இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இரண்டாவது இன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவிடம் சரணடைந்தது. 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் என்ற ஸ்கோருடன் இன்று காலை தென்னாப்பிரிக்கா தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடியது. மேற்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில், அந்த அணி எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் இழந்ததால், 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், ஷமி 3 விக்கெட்டுகளும், உமேஷ், நதீம் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரையும் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.