பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடர்ந்து நான்கு போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை, இந்திய அணி படைத்துள்ளது.
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான, இரண்டாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அதிரடி சதத்தால், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 347 ரன்கள் எடுத்து டிக்ளேர்செய்தது. கேப்டன் விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், தனது, 27-வது சதத்தை பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் மீண்டும் சரணடைந்தது. இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு பங்களாதேஷ் அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில், உமேஷ் 5 விக்கெட்டுகள், இஷாந்த் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதன் மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக, இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி படைத்தது.
மேலும், இந்திய மண்ணில், தொடர்ந்து 12-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில், 360 புள்ளிகளுடன், இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.