இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை
Dec 15 2019 1:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, மூன்று டி20, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில், டி20 தொடரை இந்திய அணி ஏற்கெனவே வென்றது.
இதன் தொடர்ச்சியாக, இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில், பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் நோக்கில், இந்திய அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களும் தயாராகி வருகின்றன. தொடரின் முதல் போட்டியில், இரண்டு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால், இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன. அதேநேரம், இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.