இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
Dec 16 2019 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, இந்தியாவை பேட்டிங் செய்யும்படி அழைத்தார். முதலில் விளையாடிய இந்திய அணியில், இளம் வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
இருவரும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஸ்ரேயாஸ் அய்யர், 70 ரன்களுக்கும், ரிஷப் பந்த 71 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் இந்திய அணி எடுத்தது. 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஹெட்மயர், ஷாய் ஹோப் ஆகியோரின் அதிரடி சதத்தால், 47 புள்ளி 5 ஓவர்களில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக, ஹெட்மயர் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, வரும் 18-ம் தேதி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.