60 வயது மேற்பட்டோருக்கு வரும் மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி : கோவின் இணையதளம், அருகிலுள்ள தடுப்பூசி மையங்களில் பதியலாம்
Feb 26 2021 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் 60 வயது மேற்பட்டோருக்கு வரும் மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கு விருப்பம் உள்ளோர் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் கடந்த மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, 60 வயது மேற்பட்டவர்களுக்கும், பல்வேறு துணை நோய்களுடன் இருக்கும் 45 வயது மேற்பட்டவர்களுக்கும் வரும் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக 20 ஆயிரம் தனியார் மருத்துவமனைகளிலும், 10 ஆயிரம் அரசு மருத்துவமனைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில், 300 முதல் 400 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர், தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவின் இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம் என்றும், அல்லது அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்று முன்பதிவு செய்யலாம் என்றும், பதிவின்போது, தங்களின் பிற நோய்கள் குறித்த மருத்துவ தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.