சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம் : பாதுகாப்பு காரணங்களுக்காக 144 தடை உத்தரவு
Aug 25 2019 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் அளித்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதனையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 13-ம் தேதி கூடிய திட்டக்குழு கூட்டத்தில், இந்தாண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, 8 ஆயிரத்து 425 கோடி ரூபாய் நிதி இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது. சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ள எதிர்க்கட்சிகள், பேரவையில் இதுகுறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை அமைந்துள்ள பெரியக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.