நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கு ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தாரிசனம் செய்தனர்.
தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற கோவில்களில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர்- காந்திமதியம்மாள் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்ச தீபவிழாவும், ஆண்டுதோறும் பத்ரதீபவிழாவும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பத்ரதீபவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதனைத்தொடர்ந்து சுவாமி சன்னிதி மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதன்பிறகு தங்க விளக்கிற்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தாரிசனம் செய்தனர். இந்நிலையில், இன்று மாலையில் சுவாமி, அம்பாள், ஆறுமுகர் சன்னதி மற்றும் உள், வெளி பிரகாரங்களில் 10 ஆயிரம் தீபம் ஏற்றப்படுகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாட்டுப் பொங்கலையொட்டி பூஜை நடைபெற்றது. இதில் 20க்கு மேற்பட்ட பசு மாடுகளுக்கு அலங்காரமும், சிறப்பு பூஜை செய்தும் பக்தர்கள் வழிபட்டனர்.
மாட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு கம்பத்தில் உள்ள அருள்மிகு நந்தகோபாலன் திருக்கோயிலில் உள்ள தம்பிரான் மாட்டு தொழுவில் உள்ள மாடுகளை வணங்கிய பக்தர்கள், அதற்கு சோளத்தட்டைகளை உணவாக வழங்கி வழிபட்டனர். ராஜ காளையை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் நான்கு மாடவீதியில் உள்ள திருவூடல் தெருவில், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார் திருவூடல் உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே தை மாதம் 2ம் நாளான நேற்று தமிழ்கடவுள் ஞானவேல் முருகன் ரத யாத்திரை நடைபெற்றது. பாறைப்பட்டியில் இருந்து முருகன் ரதத்தில் வர அதற்கு முன்னதாக தேவராட்டம், கொங்குமேளம், காளியாட்டம், கரகாட்டம், கிராமிய நடனம், தப்பாட்டம், இளைஞர்கள் நடனம் என களை கட்டியது.
கரூரில் அருள்மிகு ஸ்ரீபண்டரிநாதன் திருக்கோயிலில் பண்டரிநாதன் சுவாமிக்கும் ஆண்டாள் சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, பண்டரிநாதன் - ருக்மணி தேவி திருக்கல்யாணம் சீர்தட்டு ஊர்வலம், யாகம், ஹோமங்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பொங்கலையொட்டி சைவ சமயத்தின் தலைமைபீடமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய பசு மடத்தில் ஸ்ரீகல்யாணசுந்தரேசர் சாமி முன்பு மாடுகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அங்குள்ள கோசாலையில் உள்ள மாடுகளை நீராட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு வகையான காய்கறிகள் வழங்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்பட்டது.