காணும் பொங்கலையொட்டி களைகட்டியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா - மாடுபிடி வீரர்களின் ஏறுதழுவலை உற்சாகத்துடன் கண்டுகளிக்கும் பொதுமக்கள்
Jan 17 2019 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காணும் பொங்கலையொட்டி, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை, 800க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டியுள்ளன. அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து, காணும் பொங்கலையொட்டி, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று, வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. இந்தப் போட்டியில், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் களமிறங்கியுள்ளனர். வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்த காளைகளை, வீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில், வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்க காசு, சைக்கிள், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், அடங்காத காளைகளின் உரிமையாளர்களும் பரிசுகளை குவித்து வருகின்றனர். பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆரவாரத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.