காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் லட்சக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்
Jan 18 2019 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் லட்சக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
காணும் பொங்கலையொட்டி, ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்று ஆடி, பாடி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினர். இதே போல், பவானிஆறு, கொடுமுடி காவேரி கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணும் பொங்கலையொட்டி, சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பிளாஸ்டிக் பைகளை பூக்காவிற்கு உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. கூட்டத்தில் தவறிச் செல்லும் குழந்தைகளை கண்டுபிடிக்கும் வகையில் கைகளில் பெயர் மற்றும் தொலைபேசி எண் எழுதப்பட்ட அடையாள அட்டைகள் கட்டப்பட்டன.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழர் கால புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தங்கள் குடும்பத்தினருடன் வந்து, பிரகதீஸ்வரரை வழிபட்டும், அருகில் உள்ள பூங்காக்களில் குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காணும் பொங்கலையொட்டி, புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கடற்கரையில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இதேபோல் பாரதி பூங்கா, மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் மற்றும் சுண்ணாம் பாறு படகு குழாம் உள்ளிட்ட இடங்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.